4 - ஞாயிறு மாலைப் புகழ் 1

3- சனி மாலை செபம்

முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்

எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்

முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக

எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.

__________________________

பாடல்

(எழுந்து நிற்கவும்)

உலகப் பொருள்களின் ஊற்றாம் இறைவா,
ஒருமுனை முதல்மறு முனைவரை உள்ளவற்றை
நினைத்துச் செய்த உம் ஆற்றல் விளங்க
புனிதக் கொடையால் நீர் நிரப்புகிறீர்.

இத்துணை மாபெரும் படைப்புச் செயலை
இத்தினம் முடித்து ஓய்வெடுத்தீர்;
நித்தமும் முறையாய்ப் படைத்தபின் முடிவில்
அத்தனை எல்லாம் நலம் என்றீர்.

வலுக்குறை வுள்ள மாந்தரும் இன்று
நெறிதவறிய வழியை விட்ட கன்று
நலமிகு நெறியில் நல்லவராய் நடந்து
உரியப் பரிசைப் பெற அருள்வீர்.

நீதி வழங்கிட நீர்வரும் நாளில் உம்
தண்ணொளியைக் கண்டு ஒடுங்காமல்
தீதிலா அமைதியை அடைந்தோம் என்று
முழங்கிடு வோம்மிகு மகிழ்வோடு.
நேயரெம் வேண்டல் ஏற்பீர், தந்தாய்,
உயர்நிலை வீற்றிருக்கும் உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியருடன்
இச்செகம் என்றும் ஆளுகவே. ஆமென்.
__________________________

(அமரவும்)

மு.மொழி.1: எருசலேமில் அமைதி நிலைத்திருக்கும் படி வேண்டிக் கொள்ளுங்கள்.

ஒருநகராகிய எருசலேம்
திபா 122

ஆண்டவரது இல்லத்திற்குச் செல்வோம்", என்ற
அழைப்பைக் கேட்டு நான் அகமகிழ்ந்தேன். எருசலேமே!
எங்கள் கால்கள்
உன் வாயில்களில் நிற்கின்றன.
எருசலேம் செம்மையாக
ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும்.
ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்

இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க
ஆண்டவரது பெயருக்கு அவர்கள்
நன்றி செலுத்தச் செல்வார்கள்.
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன.
அவை தாவீது வீட்டாரின் அரியணைகள் ஆகும்.

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி
வேண்டிக்கொள்ளுங்கள்.
"உன்னிடம் அன்பு கூர்பவர்கள்
வளமுடன் வாழ்வார்களாக!
உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக
உன் மாளிகைகளில் நல்வாழ்வு நிலைப்பதாக!
உன்னுள் சமாதானம் நிலவுவதாக!"

என என் சகோதரர் சார்பிலும்
என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம்
இங்கே இருப்பதால் உன்னில் நலம் பெருகும்படி
நான் மன்றாடுவேன்

மு.மொழி.: எருசலேமில் அமைதி நிலைத்திருக்கும் படி வேண்டிக் கொள்ளுங்கள்.
__________________________

மு.மொழி. 2: விடியலிலிருந்து இரவுவரை என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.

பாதாளத்திலிருந்து உம்மை நோக்கி கப்பிடுகிறேன்
திபா 130

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான்
உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;
ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்
என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள்
கவனத்துடன் கேட்கட்டும்.

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை
மனத்தில் கொண்டிருந்தால், யார்தாம் நிலைத்து
நிற்கமுடியும்?
நீரோ மன்னிப்பு அளிப்பவர்:
மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.

ஆண்டவருக்காக நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன்
என் நெஞ்சம் காத்திருக்கின்றது.
அவருடைய சொற்களுக்காக
நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட ஆம்,
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட
என் நெஞ்சம் என் தலைவருக்காய்
ஆவலுடன் காத்திருக்கின்றது.

இஸ்ரயேலே ஆண்டவரையே நம்பியிரு
பேரன்பு அவரிடமே உள்ளது
மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு,
எல்லாத் தீவினைகளினின்றும்
இஸ்ரயேலை மீட்பவர் அவரே!

மு.மொழி.: விடியலிலிருந்து இரவுவரை என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
___________________________

மு.மொழி. 3: இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர், அல்லேலூயா

கிறிஸ்து இறை ஊழியன்
பிலி 2:6-11

கடவுள் வடிவில் விளங்கிய அவர்,
கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை
வலிந்து பற்றிக்கொண்டிருக்க
வேண்டியதொன்றாகக் கருதவில்லை.

ஆனால் தம்மையே வெறுமையாக்கி
அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்

மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி,
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்

ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர்.
கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்

தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக
இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என
எல்லா நாவுமே அறிக்கையிடும்.

மு.மொழி.: இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர், அல்லேலூயா
___________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு             2 பேது 1:19-21

இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற்கொள்வது நல்லது;
ஏனெனில், பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது. ஆனால் மறைநூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல என்பதை நீங்கள் முதலில் அறிய
வேண்டும். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள்
கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல.
__________________________

சிறு மறுமொழி

℣ - கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை கதிரவன் தோன்றி மறையும்வரை ஆண்டவரது பெயர் பெரியது.
℟ - கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை கதிரவன் தோன்றி மறையும்வரை ஆண்டவரது பெயர் பெரியது.

℣ - வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி
℟ - கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை கதிரவன் தோன்றி மறையும்வரை ஆண்டவரது பெயர் பெரியது.

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை கதிரவன் தோன்றி மறையும்வரை ஆண்டவரது பெயர் பெரியது.
__________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

மரியாவின் பாடல்

மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
__________________________

மன்றாட்டுக்கள்

தன்னுடைய நிறைவில் தன் சகோதரர் சகோதரிகளுக்கு அன்புக்குப் பதிலன்பு காட்டும்
கிறிஸ்துவிடம் உருக்கமாக வேண்டுவோம்.

℟ - ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

இறந்து உயிர்த்தெழுவோருள் தலைப்பேறானவரே நீர் உமது திரு இரத்தத்தால் எங்கள் பாவங்களைக் கழுவி எங்களைத் தூய்மைப்படுத்தினீர் நீர் எமக்குச்
செய்தவற்றை நாங்கள் உய்த்துணரும் பொருட்டு எங்களை வழிநடத்தியருளும்.

℟ - ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நீர் எங்களை நற்செய்தியின் தூதுவர்களாக இருக்க அழைத்தீர் - நற்செய்தியை நாங்கள் ஆழ்ந்து அறியவும் அதை எங்களுக்கே உரியதாக்கவும் அருள் புரியும்.

℟ - ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அமைதியின் அரசரே, ஆள்வோரின் செயல்களை நெறிப்படுத்தும் சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டவர்களுக்கு அதிக அக்கறை காட்ட உமது ஆவியானவர் அவர்களைத் தூண்டுவாராக.

℟ - ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

சமுதாயத்தால் ஒடுக்கப்படுவோரையும், சமயம், குலம் நிறம் இவற்றிற்காகத் துன்புறுத்தப்படுவோரையும் உமது ஆற்றலால் வழிநடத்தும் அவர்களுடைய மனித மாண்பு மதிக்கப்படவும், உரிமைகள் பாதுகாக்கப்படவும் செய்வீராக.

℟ - ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உமது அமைதியில் இறந்தோர் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் - அன்னை மரியாவோடும் அனைத்துப்

℟ - ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________

ஆண்டவரின் செபம்
__________________________

இறுதி செபம்

அந்தந்தக் காலத்திலிருந்து.

 தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
__________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.